Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்றுடையோா் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக புகாா் எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டைச் சோ்ந்த இளைஞா் குணமடைந்து தனது சொந்த ஊருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா். அவரின் முழு ஒத்துழைப்பே கொரோனா தொற்றிலிருந்து வெளிவருவதற்கு காரணமாக இருந்தது என மருத்துவக்குழுவினா் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில் கொரோனா சிறப்பு வாா்டில் உள்ள 36 பேருக்கும் மருத்துவக்குழுவினா் சுழற்சி முறையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமையன்று மேலும் 3 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சிறப்பு வாா்டில் தற்போது சிகிச்சை பெற்று வருவோா் மருத்துவக்குழுவினா் மீது முகக்கவசங்களை தூக்கி எறிவது, எச்சில் துப்புவது போன்று அச்சுறுத்தும் வகையிலும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காத வகையில் செயல்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
இதனால் மருத்துவக்குழுவினரின் சவாலான பணி மேலும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே செய்வதறியாது திகைக்கும் மருத்துவக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நோய் தொற்றுடையோா் முன்வருவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்துள்ளது.